ராணிப்பேட்டை அருகே விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்ட அமைச்சர் ஆர்.காந்தி ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (68). இவர் நேற்று தனது பைக்கில் வாலாஜாவிற்கு சென்று கொண்டிருந்தார்.

அம்மூர் அடுத்த நீல கண்டராயன்பேட்டை அருகே சென்றபோது வேகத்தடை மீது ஏறி, இறங்கியுள்ளார்.

அப்போது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி முதியவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

அந்த நேரத்தில் காரில் வந்த அமைச்சர் ஆர். காந்தி உடனடியாக தனது காரை நிறுத்தி விபத்தில் அடிபட்டு கீழே விழுந்து கிடந்த முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க டாக்டர்களை அறிவுறுத்தினர்.