ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஜூலை 1 முதல்,நகர, பேருராட்சிப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க எடுக்கப்படும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு: சாலை பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கடந்த 15 - ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவின்படி சோதனை முறையாக வரும் ஜூலை 1 -ஆம் தேதி முதல் 15 -ஆம் தேதி வரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பள்ளி, கல்லூரி, அலுவலக வேலை நேரங்களான காலை 8 முதல் 11 மணி மற்றும் மாலை 4 முதல் 7 மணி வரையிலான மேற்படி நேரங்களில் வணிகத் தலங்களில் கையாளக்கூடிய பொருள்கள் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணி மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணிக்கு மேல் வணிகத்தலங்களில் கையாளக்கூடிய பொருள்கள் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் பணியை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாளான ஞாயிறு அன்று எவ்வித நேரக்கட்டுப்பாடுமின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் நகரை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களையும் மேற்படி தடை விதிக்கப்பட்ட நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.

இந்நடவடிக்கையை மேற்கொள்ள காவல் துறையினா், உள்ளாட்சித் துறை அலுவலா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.