ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்து, கழிவறையை சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு 


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று காலை திடீரென பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையை நேரடியாக ஆய்வு செய்து புதிய கழிவறையை பயன்படுத்தாமல் பழைய கழிவறையை பயன்படுத்தி வந்ததையும், கழிவறையின் வெளியே தண்ணீர் தேங்கி சுகாதார மற்ற நிலையில் இருப்பதை பார்த்து தலைமை ஆசிரியரிடம் எவ்வாறு இதனை பராமரிக்கிறீர்கள், இப்படி இருந்தால் மாணவிகளின் சுகாதாரம் எவ்வாறு இருக்கும், இதை முறையாக ஆய்வு செய்து சுத்தமாக வைக்க மாட்டீர்களா என கேட்டார்.

மேலும் இந்த இடத்தினை சுத்தம் செய்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், புதிய கழிவறையின் பிரச்சினைகளை சரி செய்து பயன்படுத்திட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். பின்னர் மாணவிகளிடம் எவ்வாறு தேர்வுக்கு தயார் செய்து வருகிறீர்கள் என்பதை கேட்டறிந்தார்.

அரசு மருத்துவ மனை


இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், ஆற்காடு அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு தாசில்தார் ரவி, நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, ஆற்காடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவசங்கரி மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.