அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய லட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரக்கோணம், புளியமங்கலம் மற்றும் மோசூர் ஆகிய ரெயில்நிலையங்களிளில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த 2 வாலிபர்கள் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் அரக்கோணம் பழனிபேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் மகன் வசந்தராஜ் (வயது 30), என்பதும், ரெயில் பயணிகளிடம் செல் போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.1000 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.