ராணிப்பேட்டை மாவட்ட கெலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 3 ஆதிதிராவிடர்களுக்கும், 1 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும். பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு விளை நிலம் வாங்க தலா ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் ஏற்கனவே மானியம் பெற்றிருக்ககூடாது. நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் படிதிட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன் பெற ஆதி திராவிடர்கள் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடி யினர் http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.