ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன் ஹால் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரியதர்சினி. இவர் கடந்த 11-ந் தேதி அரக்கோணம் பஸ் நிலையத்தில் தனது 22 பவுன் தாலி செயினை தவற விட்டார். 

அப்போது அதனை கண்ட ஆட்டோ டிரைவர்களான தண்டபாணி மற்றும் ரமேஷ் ஆகியோர் கீழேகிடந்ததாலி செயினை எடுத்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் பிரியதர்சினிக்கு தகவல் தெரிவித்து, அவரை நேரில் வரவழைத்து அவரிடம் செயினை ஒப்படைத்தனர். 

தாலி செயினை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்களான தண்டபாணி மற்றும் ரமேஷ் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேரில் அழைத்து, அவர்களின் நேர்மையை பாராட்டி பரிசு வழங்கினார். 

அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்), முத்துகருப்பன் (இணையவழி குற்றப்பிரிவு), அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ்கிரிஷ் அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.