Child's head stuck in a vessel

வாலாஜாபேட்டையில் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை ஒரு மணி நேரம் போராடி, வெட்டி எடுத்து குழந்தையை மீட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை விசாலாட்சி தெருவைச் சேர்ந்தவர் ஜோனா (30). தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஜோவின்.

இந்த நிலையில், வீட்டில் சமையலுக்குப் பயன்படும் சில்வர் பாத்திரத்திரத்தை வைத்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தலை பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்டது. அந்தப் பாத்திரத்தை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குழந்தையை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை ஒரு மணி நேரம் போராடி, லாவகமாக வெட்டி குழந்தையை மீட்டனர்.

ஒன்றரை வயது குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கிக் கொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.