ராணிப்பேட்டை பெல் ஊழியர் கடந்த 5ம் தேதி அன்று வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெல் ஊழியரை தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை பெல் குடியிருப்பில் வசித்து வந்தவர் ராஜன் (41). இவர் கடந்த 7 வருடங்களாக பெல் தொழிற்சாலையில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு சிவசங்கரி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மனைவியும், மகனும், மகளும் இவர்களது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் டன்லப் நகர் 2வது தெருவில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி அன்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வெளியில் மாட்டிவிட்டு பெல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை இது குறித்து ராஜனின் மனைவி சிவசங்கரி சிப்காட் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பார்த்தசாரதி சப்-இன்ஸ்பெக்டர் தாசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான பெல் ஊழியரை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.