டி.ராஜேந்தர் உடல் நிலை - சிம்பு பரபரப்பு அறிக்கை
திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் டி. ராஜேந்தர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில்கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையல், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக அவரின் மகனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான சிம்பு என்கிற சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார்.

கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து டி.ராஜேந்தர் மற்றும் சிம்புவின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.