ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சை பயறு, உளுந்து கொள்முதல் செய்யப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடப்பு ஆண்டில் பச்சை பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் பச்சைப்பயறு சராசரி தரத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 என்ற விலைக்கும், உளுந்து நியாயமான சராசரி தரத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.63-க்கும் மத்திய அரசு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பு ஆண்டில் பச்சை பயறு 100 மெட்ரிக் டன்னும், உளுந்து 150 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வருகிற 15.5.22 வரை மட்டுமே செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார், வங்கி கணக்கு புத்தகம், நில சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்களுடன் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

விலைப் பொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குனர், வேளாண் வணிகம், ராணிப்பேட்டை, வேலூர் விற்பனை குழு செயலாளர், காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகியோரை அணுகலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.