ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலி புதுப்பேட்டை குறுக்கு தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் சரவணன் (வயது 16). பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் பனப்பாக்கம் - துறையூர் சாலையில் தரைபாலத்தில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் மீட்க முயற்சித்தும் முடியாமல், தீயணைப்பு துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை படகில் சென்று தேடும் பணியை மேற்கொண்டனர். 5 மணி நேரமாக தேடியும் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து நேற்று காலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். காலை சுமார் 7.45 மணியளவில் நெடும்புலி சுடுகாடு அருகே செல்லும் ஆற்றின் கரையோரம் சரவணன் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.