தக்காளி இல்லாமல் ரசம் எப்படி வைப்பது ?

தக்காளியும் வெங்காயமும் இல்லாமல் எந்த சமையலும் முழுமை அடையாது. ஒரு சிலர்தான் சமையலில் தக்காளி சேர்க்காமல் சாப்பிட்டு பழகியிருப்பார்கள். பெரும்பாலான மக்களுக்கு உணவில் தக்காளி வெங்காயம் சேர்த்தால் தான் பிடிக்கும். நாம் எண்ணி பார்க்கமுடியாத அளவிற்கு கிடுகிடுவென தக்காளியின் விலை அதிகரித்து விட்டது. சீரியஸாகவே தக்காளி இல்லாமல் வாழலாம் போலயே என்ற நம்பிக்கை பிறக்கிறது. விலை இந்த அளவுக்கு உயர வட கிழக்குப் பருவ மழைதான் முக்கிய காரணம் என்று வியாபாரிகள் சொல்கிறார்கள். சென்னையில் தக்காளி கிலோ ரூ.160 ரேஞ்சிற்கு விலை ஏறிவிட்டது. ரசம் என்றாலே அதற்கு தனிச்சுவையை எடுத்துக்காட்டுவது தக்காளிதான் அல்லவா? தக்காளியின் விலை அதிகரிப்பு காரணத்தினால் தக்காளி சேர்க்காமல் ரசம் எப்படி ஈஸியான முறையில் வைக்கலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருள்:


  • எண்ணெய் – சிறிதளவு
  • கடுகு – தேவையான அளவு
  • பட்ட மிளகாய் – 5
  • சின்ன வெங்காயம் – நறுக்கியது (15)
  • கருப்பு புளி (1 கப் கரைத்தது)
  • தண்ணீர் – தேவையான அளவு
  • கல் உப்பு – சிறிதளவு
  • கருவேப்பிலை – 1 கொத்து

தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி:


ஸ்டேப் 1: 

முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.

ஸ்டேப் 2: 

எண்ணெய் சிறிது நேரம் காய்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு சேர்க்கவும்.

ஸ்டேப் 3: 

கடுகு நன்றாக பொரிந்து வந்த பிறகு 5 பட்ட மிளகாயை சேர்த்து வதக்கி விடவேண்டும்.

ஸ்டேப் 4: 

கடுகு மற்றும் மிளகாய் நன்கு வதங்கிய பிறகு நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயத்தை சேர்த்து அதனுடன் வதக்கிக்கொள்ளவும்.

ஸ்டேப் 5: 

வெங்காயம் நன்றாக வெந்த பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதில் ஊற்றவும். புளி கரைசல் ஊற்றிய பிறகு 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும்.

ஸ்டேப் 6: 

அடுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும். உப்பு சேர்த்தப்பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்க்கவும்.

ஸ்டேப் 7: 

கருவேப்பிலை சேர்த்த பிறகு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். தக்காளி சேர்க்காமல் சுவையான ரசம் தயார்.

வீட்டில் தக்காளி இல்லாமல் இருந்தால் உடனடியாக ரசம் வைக்க இந்த டிப்ஸை யூஸ் பண்ணலாம். ட்ரை பண்ணி பாருங்க..!