விவசாயிகள் சோலார் மின்வேலி அமைக்க அரசு வழங்குகிறது மானியம்..! 
விவசாய நண்பர்களுக்கு வணக்கம்..! இந்த பதிவில் விவசாயிகளுக்கு பயன்படும் பல பயனுள்ள பதிவுகளை பதிவு செய்துவருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் விவசாயிகள் சோலார் மின்வேலி அமைக்க அரசு எவ்வளவு மானியம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவைப்படும், எப்படி விண்ணப்பிக்கலாம் போன்ற தகவல்களை பற்றி படித்தறியலாம் வாங்க.

தமிழ்நாட்டில் வேளாண் விலை நிலங்களுக்கு சூரிய சக்தியாலான மின் வேலிகள் அமைக்கப்படுகிறது. இதற்கென 2020 – 2021 நிதியாண்டில் 3 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம்:-
விவசாயிகள் பயிரிடும் பயிர்களை வனவிலங்குகளின் தாக்குதல்கள், பூச்சிகளின் தாக்குதல்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க பெரும் போராட்டங்களை சந்தித்து வருகின்றன. மேலும் யானைகள், காட்டெருமைகள், குரங்குகள், மயில்கள் போன்ற விலங்குகள் பயிர்களை பெரிதும் சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே இந்த பாதிப்புகளிடமிருந்து தப்பிக்க சூரியசக்தியால் இயங்கும் சுற்றுவட்டப் பாதுகாப்பு மின்வேலி அமைப்பதன் மூலம், விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். ஒரு விலங்கு வேலியைத் தொட நேரிட்டால் அதற்கு லேசான அதிர்வு ஏற்படும். ஆனால் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு மின்சாரம் தாக்காது இதன் காரணமாக விலங்குக்கு வேலியிடப்பட்டுள்ள இடத்திற்கு மீண்டும் வருவதைத் தவிர்க்கும் மனநிலை உருவாகும், இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதே இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.

எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது:-

வயல் வெளிகளில் விலங்குகள் நுழைந்திடாமல் இருக்க சூரிய சக்தியில் இயங்கக்கூடிய மின்வேலிகள் அமைப்பதற்காக விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் தங்களது தேவைக்கு ஏற்ப ஐந்து, ஏழு அல்லது பத்து வரித்தட்டுகள் கொண்ட வேலிகளை அமைத்துக் கொள்ளலாம். இருப்பினும் வரித்தட்டுகளுக்கு ஏற்ப மானிய தொகை மாறுபடும்.

அதாவது 5 வரிசைக்கு (மீட்டருக்கு ரூ.250 வழங்கப்படுகிறது)

7 வரிசைக்கு (மீட்டருக்கு ரூ.350 வழங்கப்படுகிறது)

10 வரிசைக்கு (மீட்டருக்கு ரூ.450 வழங்கப்படுகிறது)

சூரிய சக்தியிலான மின்வேலிகள் அமைக்க 50 சதவீத மானியமாக அதிகபட்சம் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாரை அணுக வேண்டும்:-

இந்த மானியத்தைப் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறையை அணுக வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:-

வேளாண் பொறியியல் துறையை அணுகும்போது தங்களுடைய ஆதார் கார்ட் நகல், தங்களுடைய புகைப்படம் இரண்டு, தங்களுடைய நிலத்தின் சான்றிதழ் மற்றும் சிறு குறு விவசாயி சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

பயனர்களின் கருத்துக்கள்:-

இந்த சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய மின்வேலி சுற்றுசூழலை பாதிக்காத வகையிலும், குறைந்த செலவிலானதாகவும் உள்ளது என்று சூரிய சக்தியினால் மின்வேலி அமைக்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற்ற விவசாயிகள் கூறுகின்றன.

இந்த சூரிய மின்வேலி எவ்வாறு இயங்குகிறது?
சூரியத்தகடுகள் சூரிய வெளிச்சத்தை உள்வாங்கி, அதனை மின்சாரமாக மாற்றி பேட்டரிக்கு அனுப்பி மின்சாரத்தை சேமித்து வைக்கிறது. இவ்வாறு சோலார் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட சக்தியை சேமித்து வைத்துக் கொள்ளும் பேட்டரி, அந்த சக்தியை எனர்ஜைசருக்கு அனுப்புகிறது. அந்த எனர்ஜைசர் குறைந்த (லோ) வோல்டேஜ் மின்சாரத்தை, தேவையான அளவுக்கான வோல்டேஜ் கொண்ட மின்சாரமாக மாற்றி மின்வேலிக்கு அனுப்புகிறது. இதனால் விலங்குகளுக்கு எந்த விதத் பாதிப்புகளும் ஏற்படாது, என்று மின் பணியாளர்கள் கூறுகின்றன.

வயல்வெளிகள் சேதமடையாமல் இருக்கவும், விவசாய்களைப், பாதுகாக்கவும் வனவிலங்குகளை எந்தவிதத் தீங்கும் விளைவிக்காத வகையில் வயல்களுக்கு அருகில் வராமல் இருக்க உதவி செய்யும் இந்த சூரிய சக்தியிலான மின்வேலி.

எனவே இதுபோன்ற பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு விவசாயிகளின் பயிர்களை வனவிலங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காக அரசு மானியம் வழங்கி வருகிறது.