வாலாஜாவில் டிவி பிளக்கை சரி செய்தபோது, மின்சாரம் தாக்கி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

வாலாஜா வி.சி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால், கூலித்தொழிலாளி. இவரது மகன் செந்தில்நாதன்(11). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். 

இவர் தனது வீட்டில் நேற்று முன்தினம் மாலை டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென டிவி ஆப் ஆனதாக தெரிகிறது. இதனால் டிவி பிளக்கை செந்தில்நாதன் சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் தூக்கிவீசப்பட்ட செந்தில்நாதன் மயங்கி விழுந்தார். 

சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.