வாலாஜா அருகே கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைக்கப்படும் வெடியில் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த அனந்தலை மலையில் எண்ணற்ற கல் குவாரிகள் இயங்குகின்றன. இந்த கல்குவாரிகளில் வெடிவைத்து பாறைகளை உடைக்கப்படுகின்றன. இங்கு வைக்கப்படும் வெடிகளால் அனந்தலை மலையை சுற்றியுள்ள அனந்தலை, எடகுப்பம், வாலாஜா, அமணந்தாங்கல், தென்கடப்பந்தாங்கல், செங்காடு, மோட்டூர், ஈச்சந்தாங்கல், முசிறி போன்ற கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இந்த கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் ஏற்படும் மாசுவினால் மாசுவினால் விவசாய பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

வீடுகளில் விரிசல்

மேலும் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும்போது ஏற்படும் அதிர்வு காரணமாக அந்தப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை பெயர்ந்து விழுகின்றன. இந்த அதிர்வுகளால் சில பெண்களுக்கு கருச் சிதைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்குவாரியில் வெடிவைத்தபோது அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.