வேலூர் அருகே சாலையோர மரத்தில் பைக் கட்டுபாட்டை இழந்து மோதியதில் தாய்-மகன் பலியாகினர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த சந்திராபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி மல்லிகா (50). இவர்களின் மகன் சதீஷ் (27) வேலூர் அடுக்கம்பாறை பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி நடத்தி வந்தார். அவருக்கு உதவியாகத் தந்தையும், தாயும் இருந்துள்ளனர். 3 பேரும் கடையின் மேல்தளத்தில் உள்ள அறையில் தங்கியதாகவும், வாரம் ஒருமுறை வீட்டிற்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் சதீஷ் தனது பைக்கில் தாய் மல்லிகாவுடன் அடுக்கம்பாறையிலிருந்து சொந்த ஊரை நோக்கிச் சென்றார். வேலூரை அடுத்த ரெட்டேரி கோடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். அதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதீஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மல்லிகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இதுகுறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த விபத்துகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.