ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொற்று பாதிப்பின்றி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் குறித்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் பேசியதாவது:-

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களது தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகள் அனைத்தையும் 100 சதவீதம் தணிக்கை மேற்கொண்டு வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிவறை வசதி மற்றும் சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களை தேர்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான இடத்தை தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

தொற்று பாதிப்பின்றி

தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரைகளின் படி, கொரோனா தோற்று பாதிப்பின்றி தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தேர்தல் நாளன்று ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் பயோமெடிக்கல் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கும் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் உமா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், உதவி கலெக்டர் இளம்பகவத், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பேபி இந்திரா, தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.