வேலூர்: குடியாத்தம் அருகே தீ விபத்தில் 5,400 கோழிக்குஞ்சுகள் கருகி இறந்தன.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகத்தியபாபு. 
இவர் சொந்த நிலத்தில் கோழிப்பண்ணை வைத்திருந்தார். கோழிப்பண்ணையில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். 

தீ விபத்தில் பண்ணையில் இருந்த 5 ஆயிரத்து 400 கோழிக்குஞ்சுகள் கருகி பலியாகின. கோழிப்பண்ணை மேற்கூரைகளும், அங்குள்ள பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம்குறித்து உடனடியாகத் தெரியவில்லை. வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.