தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நாளை மறுநாள், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஜனவரி 8ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், மதுராந்தகம், ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டி ஆகிய இடங்களில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், தரமணி Arg (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கொளப்பாக்கம் Arg (செங்கல்பட்டு), அண்ணா யூனிவர்சிட்டி Arg (சென்னை), திண்டிவனம் (விழுப்புரம்), சென்னை விமானநிலையம் (சென்னை) தலா 5 , தாம்பரம் (செங்கல்பட்டு) 4, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மணிமுத்தாறு (திருநெல்வேலி), எண்ணூர் Aws (திருவள்ளூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சோழவரம் (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பாபநாசம் (திருநெல்வேலி), செய்யூர் (செங்கல்பட்டு), அம்பத்தூர் (திருவள்ளூர்), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்) தலா 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.