வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டா சுப்பையா தெருவில் எந்த ஒரு விளம்பரமுமின்றி ஒரு வீட்டில் பெண்கள் அதிகம் வேலை செய்வதாகக் குடியாத்தம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து உள்ளூரில் இருந்தும் வெளிமாநிலத்தில் இருந்தும் தொடர்ந்து போலியாகப் பொருட்களை விற்பனை செய்வதாகக் குடியாத்தம் காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையிலும் பொதுமக்கள் அளித்த ரகசிய தகவலின் பேரிலும் அந்த வீட்டைப் போலீசார் சோதனை செய்ததில் அங்கு 15 பெண்கள் எந்த ஒரு விளம்பரமுமின்றி வேலை செய்து வந்தது தெரியவந்தது.
அந்தப் பெண்களிடம் குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பொதுமக்களிடம் தொலைபேசிமூலம் தங்களுக்கு பரிசு விழுந்துள்ளதாகவும் தாங்கள் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் சார்ஜர் பாதி விலைக்குத் தருவதாகவும் கூறி பொதுமக்களை ஏமாற்றி செல்போனிலும் மற்றும் சார்ஜர்களிலும் களிமண்ணை வைத்துப் பொதுமக்களுக்குத் தபால் மூலம் அனுப்பி ஏமாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

பின்னர் அங்குப் பணியில் இருந்த பெண்களின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்து பின்னர் அவர்களைப் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.அங்கிருந்த செல்போன் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.போலி கால் சென்டர் உரிமையாளர் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (எ) வேலாயுதம் (33) என்பது தெரியவந்தது.சுரேஷை பிடிக்கக் குடியாத்தம் போலீசார் மாதனூர் விரைந்து சென்றுள்ளனர்.