சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட கொண்டபாளைம் பகுதியில் உள்ள ஸ்ரீராம்நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக சோளிங்கர் பேரூராட்சி நிர்வாகத்தின் பொதுநிதியில் இருந்து 2018-2019ம் ஆண்டு ரூ.2 லட்சம் மதிப்பில் 400 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டது.

அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அந்த ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது பெய்த கனமழையால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததால், அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் ஊற்றெடுத்து வழிகிறது.

ஆழ்துளை கிணற்றில் இருந்து ஊற்றெடுத்து வழிந்தோடும் தண்ணீரை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்களும் சம்பவ இடத்துக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள்.