வேலூரில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வேலூர் கவுரவ தலைவர் தர்மலிங்கம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கலந்து கொண்டு பேசினார். இதில் லாரி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை 12 கம்பெனிகளில் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது. அங்கு வாங்கினால் தான் தரச்சான்று வழங்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். லாரிகளில் பொருத்தும் ஜி.பி.எஸ். கருவிகளும் அவர்கள் கூறும் 8 கம்பெனிகளில் தான் வாங்க வேண்டும் என்கின்றனர்.
இதனால் எங்களுக்கு 5 முதல் 10 மடங்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

இதுதவிர ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் குறிப்பிட்ட 2 கம்பெனிகளில் தான் வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். 

இதை கண்டித்து தமிழகத்தில் வருகிற 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே முதல் -அமைச்சர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணவேண்டும்.

15 ஆயிரம் லாரிகள்நாங்கள் போராட்டம் நடத்தினால் ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்படும். பால், தண்ணீர், மருந்து பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் தவிர பிற லாரிகள் ஓடாது. பிற மாநிலங்களில்இருந்து தமிழகத்திற்குள்ளேயும், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும் லாரிகள் இயங்காது.

இதற்கு பிற மாநில உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 ஆயிரம் லாரிகள் ஓடாது.இவ்வாறு அவர் கூறினார்.