ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த ராமப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குண்டு என்கிற சுப்பிரமணி. இவர் அப்பகுதியில் உள்ள விளாரி ஏரியில் மீன் பிடிப்பதற்கான உத்திகையை எடுத்துள்ளார். இவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த தினகரன் இவரது மகன் அசோக் ஆகியோர் மீன் பிடிப்பதற்கு சுப்பிரமணியுடன் உதவியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பவர் இரவு நேரங்களில் பிலால் ஏரியில் குத்தகைக்காரர்களுக்கு தெரியாமல் மீன் பிடித்து வந்துள்ளார். இது தொடர்பாக இருந்த பிரச்சினை காரணமாக தினகரன் அசோக் மற்றும் கலையரசு ஆகியோருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்கனவே தகராறு ஏற்பட்டு இது தொடர்பாக திமிரி காவல் நிலையத்தில் இருதரப்பு மீதும் பதிவு உள்ள நிலையில் மீண்டும் கலையரசு நேற்று இரவு ஏரியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை தினகரன் மற்றும் கலையரசுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது கலையரசு வீட்டில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு தினகரனை வெட்ட முயற்சித்துள்ளார் அப்பொழுது அசோக் அந்த கத்தியை பிடுங்கி கலையரசை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயமடைந்த கலையரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திமிரி போலீசார் உயிரிழந்த கலையரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் அசோக் மற்றும் அவரது தந்தை தினகரன் ஆகியோரை தேடி வரும் போலீசார் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திமிரி சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.