ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், தனது புதிய ஏவிடிஆர் 4825 ரக டிப்பரை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

இந்தியாவின் கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிப் பிரிவுகளுக்கு பயன்படும் வகையில் ஹெச்6 என் என்ஜின் பொருத்தப்பட்ட ஏவிடிஆர் 4825 டிப்பர்களை நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.

19 முதல் 55 டன் வரை எடைத்திறன் கொண்ட வர்த்தக வாகனங்களை நிறுவுவதற்கான நிறுவனத்தின் முதல் பல்பயன்பாட்டு வாகன அடித்தளமாக ஏவிடிஆர் திகழ்கிறது.

அந்த அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள ஏவிடிஆர் 4825 டிப்பர்கள் அதிக செயல்திறன், நீடித்துழைக்கும் தன்மை, நம்பகத்தன்மையைக் கொண்ட வையாக இருக்கும்.
அதிக சக்திவாய்ந்த ஹெச்6 4வி என்ஜின்களும், அந்த என்ஜின்களின் சக்தியை சக்கரங்களுக்குக் கடத்துவதற்காக பொருத்தப்பட்டுள்ள கடுமையாக உழைக்கும் திறன் கொண்ட - சாதனங்களும் இந்த புதிய டிப்பர்களை எல்லா பணிகளுக்கும் ஈடுபடுத்துவதற்கு ஏற்றவையாக ஆக்குகின்றன என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.