வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48), உப்பரப்பள்ளியில் உள்ள துணை மின்நிலையத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 4-ந்தேதி வெங்கடேசன் தனது மகன் கோபிநாத்துடன் (21) மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்தில் இருந்து தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

ராமாலை தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் சென்ற போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது சாலையோரம் இருந்த மரம் திடீரென மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை-மகன் மீது விழுந்தது. இதில் சிக்கி வெங்கடேசனும், கோபிநாத்தும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து அங்கிருந்து 2 பேரும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான வெங்கடேசனுக்கு அமுதா என்ற மனை வியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் கோபிநாத் தந்தையுடன் விபத்தில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.