வைகை எனப்படும் வாகை மரம். போரில் வெற்றி பெற்றவர்கள் சூடுவது வைகை மலர்க்கொத்தாகும். வாகைப்பூவை வெற்றிப் பூ என்பர். வாகைப் பூ கொற்றவைக்கு உரியதாகும் எனவே கடவுள் வாகை எனப்படும்.

Vaagai Maram in Tamil


தாவரவியல் பெயர் : அல்பிசியா லெப்பெக் (ALBIZIA LEBBECK )
குடும்பம் : மைமோசி (Mimosoideae)

வாகை மரம்

இலையுதிர்க் காடுகளிலே பரவலாகக் காணப்படும். இந்தியா முழுவதும் பரவி வளர்ந்து இருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரமாக உள்ள இடங்களில் நன்றாக வளர்கிறது. 15-20 மீட்டர் உயரம் ஓங்கி வளரும். இலைகள் 2-4 செ.மீ நீளமும், 12 செ.மீ அகலமும் உடையது. 

திருவாழ்கொளிப்புத்தூர் எனும் கோவிலில் வாகை தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இஃது நெடிதுயர்ந்து வளரக் கூடிய பெரிய மரமாகும். பசிய சிறகமைப்புக் கூட்டிலைகளைக் கொண்டது. 

கொத்தான மகரந்தத் தாள்களையும், தட்டையான காய்களையும் உடையது. உலர்ந்த காய்கள் வெண்மையாய் இருக்கும். இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையன. இம்மரம் தமிழகத்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் தானே வளர்ந்து காணப்படுகின்றது.

சிறந்த காற்றுத் தடுப்பு மரமாகவும், சாலைகளில் நிழல் தரும் மரமாகவும் பயன்படுகிறது. கடற்கரை ஆற்றங்கரை ஓரங்களில் மண் அரிப்பைத் தடுக்க வளர்க்கலாம். இலையை அரைத்து கண்களில் வைத்துக் கட்டுவதன் மூலம் கண் நோய்கள் குணமாகும். வேர்ப்பட்டையைப் பொடி செய்து, அதில் பல் துலக்கினால் பல் ஈறுகளில் வரும் புண்கள் குணப்படும். இதன் எண்ணெய் தொழு நோயைக் குணப்படுத்துகிறது. விதையைப் பொடியாக்கி மூக்குப் பொடியில் கலந்து, மூக்கிலிருந்து நீர்வடிதல், ஜலதோஷம் போன்றவற்றிற்கு முகரச் செய்வார்கள்.

• வாகைப்பூ நஞ்சு முறிக்கும், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்; பட்டை உடல் வெப்பம் தணிக்கும்.

• வாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும்.

• வீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

• இருமல், நுரையீரல் அலர்ஜீ ஆகியவற்றிற்கு இவை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

• இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையனவாக கருதப்படுகின்றது. வாகை வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று.

• தமிழீழத்தின் தேசிய மரமாகும்.





இதை எழுதியவர் மஞ்சு பிரியா