ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மழையூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி. விடுதலை சிறுத்தை கட்சியின் ஆற்காடு தொகுதி இளைஞர் எழுச்சி பாசறை செயலாளராக இருந்தார். 

இவர் நேற்று முன்தினம் காலை செய்யாத்து வண்ணான் சுடுகாடு அருகே வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மழையூர் ரோட்டு தெருவை சேர்ந்த ராஜேஷ் (37), ஆனந்தன் (70), ரவி (35) ஆகியோர் பார்த்தசாரதியை கொலை செய்தது தெரியவந்தது. 

கொலை சம்பந்தமாக ஆனந்தன், ரவி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பார்த்தசாரதி ராஜேஷ் இருவரும் விடுதலை சிறுத்தை கட்சியில் பதவி இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இதில் பார்த்தசாரதி தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆற்காடு தொகுதி இளைஞர் எழுச்சி பாசறை செயலாளர் பதவி வாங்கி உள்ளார். 

இதனால் பார்த்தசாரதிக்கும், ராஜேஷுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் பார்த்த சாரதியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ராஜேஷ் நேற்று முன்தினம் காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற பார்த்தசாரதியை பின் தொடர்ந்து சென்று வெட்டி கொலை செய்ததாக கொலையாளிகள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ராஜேஷை போலீசார் தேடி வருகின்றனர்.