Brahmotsavam 2022 in Tirupati Eyumalayan Temple !

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழா குறித்து நேற்று திருமலை அன்னமைய்யா பவனில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தர்மா ரெட்டி பேசியதாவது:

கொரோனாவால் 2 ஆண்டுகள் வரை மாட வீதிகளில் வாகன சேவை நடத்தாமல் கோயிலுக்குள் மட்டும் வாகன சேவைகள் பிரம்மோற்சவ விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டு பிரம்மாண்டமான முறையில் பிரம்மோற்சவம் நடத்தப்படும்.

ஏழுமலையானின் பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், அக்டோபர் மாதம் 1-ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையாகும். 

ஆதலால், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், அக்டோபர் 2-ம் தேதி தங்க ரதத்தில் சுவாமி பவனி வர உள்ளார். 3-ம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 4-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.

இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரம்மோற்சவம் தொடங்கப்படும் நாளான செப்டம்பர் மாதம் 27ம் தேதி மாலை சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். 

மேலும் விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்பதை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என தர்மா ரெட்டி கூறினார்.