108 Ambulance crashes into tree near Timiri: Technical assistant died


திமிரி அருகே 108 அவசர ஊர்தி மரத்தில் மோதிய விபத்தில் தொழில்நுட்ப உதவியாளர் உயிரிழந்தார்.

கலவை வட்டம், அல்லாளசேரி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி லாவண்யா கலவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு இருந்தார். கர்ப்பிணியான அவரை பிரசவத்துக்காக அங்கிருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை நள்ளிரவு 108 அவசர ஊர்தி மூலம் அழைத்துச் சென்றனர். 

அப்போது ஆற்காடு-ஆரணி சாலையில் திமிரியை அடுத்த மேட்டு குடிசை கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவசர ஊர்தி நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இதில் ஊர்தியின் ஓட்டுநர் பரதராமி கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன், தொழில்நுட்ப உதவியாளர் கலவையை அடுத்த மழையூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (36) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். 

லாவண்யா காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து, அவர்கள் மீட்கப் பட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெங்கடேசன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

இது குறித்த புகாரின்பேரில், திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.