அக்கார அடிசல்

ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - 

கோதா ஸ்துதி.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு. 

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். 

ஆடி பூரம் அன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும். 

ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடல் பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, ஆடி பூர நாளிள் பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.

ஆண்டாளின் முப்பது பாடல்களிலும், தோழியரை அதிகாலைப் பொழுதில் எழச் செய்து கண்ணனைக் காண அழைக்கும் பாடல்களாகவும், பாவை நோன்பின் மாண்பினையும், நோன்பு இருந்தால் மாதம் மும்மாரியும், நல்வாழ்க்கையும் கிடைக்கும் என்பதும் விபரமாக இருக்கின்றது.

ஆண்டாளையும், அவள் எழுதிய திருப்பாவையையும் காண்போம்.
இந்து சனாதன மதத்தினுள், ஷண்மதங்களில் ஒன்றாகிய, ஸ்ரீ வைஷ்ணவம் - ஸ்ரீ மஹாவிஷ்ணுவைப் போற்றி வழிபாடு செய்யும் வகை ஆகும்.
வேதங்கள் போற்றும் வேதநாயகனாகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை - தமிழில் பனிரண்டு ஆழ்வார் திருமக்கள் எழுதிய ஐந்தாம் வேதம் என்று போற்றப்படக்கூடிய "நாலாயிர திவ்ய பிரபந்தம்" (4000 பாடல்கள்) - போற்றி பறை சாற்றுகின்றன. (இந்தப் பதிவின் முன் பதிவாகிய 'ஆழ்வார்கள் அருளிய அமுதம்' காணுங்கள்). இப்பாடல்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அனைத்து லீலைகளையும் பகர்கின்றது.
இடைக்காலத்தில் (பல்லவர்கள் காலத்திற்கு பிறகு) தமிழுக்கு ஏற்பட்ட தொய்வுக்கு, இப்பாடல்கள் அனைத்தும் தமிழை சீர்தூக்கி நிறுத்தின. கேட்க கேட்க தெவிட்டாத தமிழ்ப் பாடல்கள். தமிழன்னையின் அழகுக்கு மேலும் அழகூட்டின.

பனிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக விளங்கியவர் கோதை நாச்சியார் எனும் ஆண்டாள். இவள் எழுதிய பாடல்கள் தமிழன்னைக்கு சூடாமணியாக விளங்குகின்றன.
ஆண்டாள் :பனிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் பெரியாழ்வார். அவர் தினமும் திருமாலுக்கு திருமாலைத் தொண்டு செய்துகொண்டிருந்தார்.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் அவரின் நந்தவனத்தில், "பஞ்சவர்ஷா திவ்ய ரூபா திவ்யாபரண பூஷிதா, நீலோத்பலதள ச்யாமா திவ்யாம்பர ஸமாவ்ரதா" என்ற ஸ்தலபுராணத்தின்படி, ஒளி வீசும் முகத்துடனும், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச் செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக ஆடி பூர நன்னாளிள் அவதரித்தாள்.

அக்குழந்தையை பெரியாழ்வார் கண்டெடுத்து, கோதை என பெயர் சூட்டி, (கோதை என்றால் தமிழில் மாலை என்றும் பொருளுண்டு) தமிழையும், கிருஷ்ண பக்தியையும் ஊட்டி, அருமையுடனும், பெருமையுடனும் திருமகள் போல (பெரியாழ்வார் திருமொழி 3) வளர்த்து வந்தார்.
குழந்தை முதலே கோதை கண்ணன் மீது பெரும் பக்தி கொண்டாள்.

அந்த பக்தி நாளாக நாளாக கண்ணன் மீது காதலாக மலர்ந்தது. எங்கு நோக்கிலும் கண்ணனின் திருவுரு தெரிவது போலவே மனம் மாறினாள்; விண்ணின் நீலம் கண்டால் அது கண்ணனின் நிறம் என்பாள்; அழகு மலரைக் கண்டால் அது கண்ணனின் கண் என்பாள். கண்ணனையை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்றே காலம் நகர்த்தினாள்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்ற பாடல் மூலம் ஆயிரம் யானைகள் சூழ, உறவினர்கள் புடை சூழ கண்ணனை திருமணம் புரிய வேண்டும் என்று கனவு காண்கின்றாள்.
பெரியாழ்வார் வீட்டில் இல்லாத சமயம், பெருமானுக்கு சார்த்துவதற்காக வைத்திருந்த மாலைகளை எடுத்து, தான் அணிந்து கொண்டு, கண்ணனுக்குத் தோதாக, கோதை தான் இருக்கின்றேனா என்று கிணற்று நீரின் நிழலில் (கண்ணாடியில் தெரிவது போன்ற) பிரதிபிம்பத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்வாள். (ஆண்டாளின் அழகைக் காட்டிய அந்தக் கிணறு இன்றும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆலயத்தில் உள்ளது).

அதன் பின்னே மாலைகளை பெருமாளுக்குச் சூடக் கொடுப்பாள். ஆகையாலே ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியானாள்.
பெரியாழ்வார் மிகப் பெரும் தமிழ் ஆர்வலர், புலவர்.
அவரின் மகள் அவரைப் போலவே தமிழ்ப் பாக்கள் தொடுப்பதில் ஆர்வமாயிருந்தாள்.

ஆண்டாளின் பாடல்கள் இயற்றரவிணை கொச்சகக்கலிப்பா என்று சொல்கின்றார்கள். மிகக் கடினமான யாப்பு வகையைச் சேர்ந்தது. ஒரு பெண் அந்தக் காலத்தில் இப்படி யாத்தது மிகவும் ஆச்சர்யம் அளிக்கின்றது. ஆண்டாள் அருளியது திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி.

ஆண்டாளின் திருப்பாவையில் பெண்மையின் குணங்களும், மென்மையும், நளினமும் நிறைந்திருக்கிறது.

ஆனால், ஆண்டாளின் பாடல்களின் கண்ணனை மட்டுமே அடைய வேண்டும் என்ற காதல் வேட்கையில் பாடும் பாடல்களில் காதலும் கவினுற சேர்கின்றது.

ஜெயதேவர் தன் அஷ்டபதியில் நாயகன் நாயகி பா(ba)வனையில் எழுதியிருந்தாலும், ஆண்டாள் - ஒரு பெண்ணின் கோணத்திலிருந்து பரமனைக் காதலால் பாடுவது அருமையாக அமைகின்றது.

திருப்பாவையில் பெண்மையின் - ஆசைகள், வேண்டுதல்கள், நோன்பு நோற்றல், அணிகலன்கள் அணிதல் - முதலானவை மிளிர்கின்றது.

பெண் தன்மை மட்டுமல்லாமல் ஆண்டாள் பல நோக்குடையவளாக இருந்திருக்க வேண்டும். விஞ்ஞானம் (கடல் நீர் ஆவியாகி மேகத்திலிருந்து மழை பொழிவது), வானவியல் (வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று - இந்த வரிகளைக் கொண்டே ஆண்டாளின் காலத்தை அறிஞர்கள் நிர்ணயித்திருக்கின்றார்கள்) போன்ற கலைகளையும் அறிந்திருக்கின்றாள் என்பது புலனாகின்றது.

இயற்கைக் காட்சிகளை வர்ணிக்கையில், முதன் முதலில் காட்சியைப் பார்க்கும், குழந்தையின் குதூகலம் தெரிகின்றது. பாக்களைப் பார்க்கையில் இலக்கண முதிர்ச்சி தெரிகின்றது. பரந்தாமன் மேல் கொண்ட அளவிற்கடந்த பக்தி தெரிகின்றது.

இனி ஆண்டாளிடம் வருவோம்.
தினமும் ஆண்டாள் செய்து வரும் 'மாலையைச் சூடிப் பின் அரங்கனுக்கு சூடக்கொடுப்பதை' ஒரு நாள் பெரியாழ்வார் கண்டு அதிர்ச்சி கொள்கிறார். கண்ணனே என் கணவன் ஆவான் என எண்ணம் கொண்டிருக்கும் ஆண்டாளைக் கண்ட பெரியாழ்வார்க்கு கவலை அதிகமாகிறது. அவரின் கவலையை நீக்கும் விதமாக ஆண்டாளை பங்குனி உத்திரத்தன்று ஏற்போம் என்கிறார் பரமன்.

பரந்தாமனிடம், பெரியாழ்வார் - ஆண்டாளை ஸ்ரீவில்லிப்புத்தூரில், ஊரார், உறவினர்கள் அனைவரையும் சாட்சியாக நிறுத்தி, தாங்கள் ஏற்க வேண்டும் என்று - ஒரு பெண்ணின் தந்தையின் ஸ்தானத்தில் நின்று வரம் கேட்கிறார். அவ்வண்ணமே "சொன்னவண்ணம் செய்யும் பெருமாள்" அருள்பாலிக்கின்றார்.
அந்த நாளும் வந்தது. ஊரார், உறவினர் அனைவரும், ஆண்டாளை அலங்கரித்து வந்து பெருமானிடம் சேர்க்க வருகின்றனர். நேரம் போய்க்கொண்டேயிருக்கின்றது, ஆனால் பெருமானைக் காணோம்.
இனியும் பொறுக்க மாட்டாத ஆண்டாள், கருடாழ்வாரை மனமுருக பிரார்த்தனை செய்து, 'பரந்தாமனை உடனே அழைத்துவந்தால், எங்கள் அருகிலிருக்கும் பாக்கியம் உங்களுக்கு உண்டு' என்று வேண்டுகிறார்.
கருடாழ்வார் மறுகணமே பெருமானிடம் சென்று, இனி ஒரு கணம் தாமதித்தாலும் ஆண்டாள் உயிர் பிரிவாள் என எடுத்துச் சொல்ல, பரந்தாமன் கையில் செங்கோல் ஏந்தி, ரங்கமன்னனாக, இன்முகத்துடன் ஆண்டாளை கரம் பிடிக்கின்றார். (ஸ்ரீ வில்லிப்புத்தூர் புராணம்)
கருடாழ்வார் உதவியதால், ஆண்டாளின் வாக்குப்படியே ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெருமானுக்கு அருகிலிருக்கும் பாக்கியத்தை கருடாழ்வர் பெற்றார்.

இனி ஆடி பூரம் :
ஆடி பூர மாதத்தில் தக்க கணவனை அடைய பாவை நோன்பு காப்பது பெண்களின் பழங்கால விரதங்களில் ஒன்று.

ஆண்டாளின் பாசுரங்களில் ஆபரணங்கள் பூணுவதைச் சொல்கின்றாள். சூடகம் எனும் கையில் அணியும் வரிவளை எனும் வளையலைச் சொல்கின்றாள். பாடகம் எனும் காலில் அணியும் ஓசை எழுப்பாத கொலுசு பற்றி சொல்கின்றாள்.

செவிப்பூ, காறை என்று பல அணிகலன்களை அணிந்து மகிழ்வோம் என்கின்றாள். அவள் சொன்ன பல அணிகலங்கள் இன்று இல்லை. பாடகம் - சிலர் மட்டுமே விரும்பி அணிகின்றார்கள்.

ஆண்டாளுக்குப் பின் பிறந்தவர்; ஆனால் ஆண்டாளின் அண்ணன் ஆனார் :வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்படக்கூடியவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தை மேலும் தமிழகத்தில் ஆழமாக பரப்பியவர். ஆண்டாளின் மீதும், அவளின் பாசுரங்களின் மீதும் பெரும் பக்தி கொண்டவர். "திருப்பாவை ஜீயர்" என்றே போற்றப்பட்டார். 

ராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) ஆண்டாளின் பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப,
"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்; நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ"
நூறு தடா (தடா என்றால் பெரிய அடுக்கு அல்லது பெரிய குவளை அல்லது பெரிய அண்டா) முழுக்க அக்காரவடிசலும், வெண்ணையும் சேர்த்து நிவேதனம் செய்தார். ஆண்டாள் எண்ணிய செயலை இவர் செய்து காட்டினார். 


ஒவ்வொரு க்ஷேத்ரமாக சேவித்துக்கொண்டு, பிறகு ஸ்ரீ வில்லிப்புத்தூர் வந்து பெருமானை சேவிக்கவந்தார்.
கோயிலினுள் நுழைந்ததுமே, "வாரும் என் அண்ணலே" என்ற அழகிய பெண் குரல் ஒன்று இவரை நோக்கி அழைத்தது. சுற்று முற்றும் பார்த்தார். யாரும் இல்லை.

மீண்டும் மீண்டும் அந்த அழகிய குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. யாராக இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க, அங்கே கருவறையிலிருந்து ஆண்டாள் அழகாக அசைந்து வந்து, "வாருங்கள் என் அண்ணா" என்று அழைத்தாள்.
பக்தியுடன் பரவினார் ராமானுஜர். ஆண்டாளுக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தவர் ராமானுஜர். தம்பி என்றல்லவோ ஆண்டாள் அழைக்க வேண்டும். ஏன் அண்ணன் என்று அழைத்தார்? அதற்கு பதிலும் அவளே சொல்கின்றாள்.
என் எண்ணத்தை (நூறு பெரிய அடுக்குகள் முழுக்க அக்காரவடிசல் நிவேதனம் செய்த) நிறைவேற்றுபவர் யாராக இருக்க முடியும்? எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை நிறைவேற்றச் சொல்லியிருப்பேன். அண்ணனோடு பிறக்கவில்லை. ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் ஸ்தானத்தில் நின்று நிறைவேற்றியவர் தாங்கள் தான். ஆகையாலேயே அண்ணா என்று அழைக்கின்றேன் என்றாள். ராமானுஜர் பூரித்து நின்றார்.

ஆண்டாள் திருப்பாவையின் பாடல்களின் தன்னை ஆண்டாள் என்றோ, பெரியாழ்வாரின் மகள் என்றோ நினைந்து பாடாமல், பிருந்தாவனத்தில் உள்ள கோபியரில் ஒருவராகவே கற்பனை செய்து கொண்டு பாடி மகிழ்ந்தாள்.

 நிகழ்காலத்திலும் தன்னை ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தாள்.
அதே போல் ராமானுஜர் ஆண்டாளின் திருப்பாவையை பாடும்போதெல்லாம் தான் ஒரு ஆச்சார்யர் என்றோ, பாஷ்யங்கள் பல எழுதிய குரு ஸ்தானத்தில் இருப்பவர் என்றோ நினையாமல், ஆண்டாள் எண்ணியது போலவே, தானும் ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனையுலகில் சஞ்சரித்து, நிகழ்வுலகில் நடந்துகொள்வார்.

நம்பியின் பெண்ணா? நப்பின்னையா?இதே ராமானுஜர் ஒரு சமயம் ஆண்டாளின் பாடல்களைப் பாடிக்கொண்டே, திருக்கோட்டியூர் நம்பியின் (இவரும் ஒரு ஆச்சார்யர் தான்) வீட்டிற்குச் சென்றார். கதவு சார்த்தியிருந்தது.
"செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்" என்ற பாடலை பாடிநின்றார்.
பாசுர ஒலி கேட்டு, வீட்டின் உள்ளேயிருந்த திருக்கோட்டியூர் நம்பியின் பெண் ஆகிய தேவகி, அலங்கார ஆபரணங்கள் பூண்டு, வளையோசை எழும்ப, கதவைத் திறக்கிறார். ஆண்டாள் பாசுரத்தில் இதே போன்ற கட்டம் வரும்போது, ஆண்டாளுக்காக கண்ணனின் மனதுக்கினிய நப்பின்னை கதவைத் திறப்பாள். அவளை ஆண்டாளும் தோழியரும் பக்தியுடன் சேவிப்பார்கள். 
அதே போல இந்தப் பாடல் பாடி முடித்ததும், ராமானுஜருக்கு கதவைத் திறந்தது நம்பியின் பெண் என்று புலனாகாமல், ஆண்டாள் பாசுரங்களில் மூழ்கியிருந்ததால், கதவைத் திறந்த நம்பியின் பெண் "நப்பின்னையாகவே" கண்ணுக்குத் தெரிந்தாள். உடனே நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்து சேவித்தார். நம்பியின் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை, ஏன் ஒரு மஹாநுபாவர் நம் காலில் விழ வேண்டும் என்று பதறியபடியே உள்ளே வந்து தந்தையிடம் நடந்ததைச் சொல்ல, மேதாவிலாசம் கொண்ட அவரும் புன்சிரிப்போடு நடந்ததைப் புரிந்து கொண்டு, அவளிடம் நிலையை விளக்கினார்.

ஆண்டாளின் திருப்பாசுரங்கள் நம்மை ஆண்டுகொள்ளும். நம்மை தெய்வ ஸந்நிதானத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் அமைந்தது.
ஆடி பூர நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும் 
 ஆண்டு தோறும் ஆடி பூர நாள் வைஷ்ணவத் திருத்தலங்களில், ஆடி பூரம் என்ற பெயரில் ஒரு வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல மாங்கல்யம் அமையும் பிரிந்த தம்பதியர் கூடுவார்கள் என்பது ஐதிகம். 
கோடி நன்மை தரும் ஆடி பூரநாளில் தேவர்களின் நேரமான விடியற்காலையில் "யார் ஒருவர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, பக்தியுடன் இறைவனை வழிபடுகிறார்களோ அவர்கள், ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபாடு செய்த பலன்களை ஆடி பூர ஒருநாள் வழிபாட்டில் கிடைக்க பெறுகிறார்கள். மாதம் முழுவதும் வழிபட்டால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது கணக்கில் அடங்காது. 

ஆண்டாளின் வேண்டுதல் பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து படைப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது.

 பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ராமானுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச் சமர்ப்பித்தார். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் 27ஆம் கூடாரவல்லி வைபவத்தின்போது, 120 லிட்டர் பால், 250 கி.கிராம் அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

ஜோதிட ரீதியாக கூடாரவல்லி: ஜோதிட ரீதியாக கூடாரவல்லிக்கு குருவும் சுக்கிரனுமே காரக கிரகம் ஆகின்றனர். குருவும் சுக்கிரனும் ஜோதிடத்தில் நைசார்கிக சுபர்கள் ஆவர். அவர்கள் இருவரும் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்துவிட்டாலே வாழ்வில் கூடாதது என்பது கிடையாது எனலாம். திருமணம், குழந்தை பேறு, வசதி வாய்ப்பு , மகிழ்ச்சியான வாழ்க்கை இப்படி எது வேண்டுமானாலும் குரு மற்றும் சுக்கிரனின் அருள் இன்றி நிறைவேறாது. 

சுக்கிர பகவான் வெற்றியை தரும் தனுர் ராசியிலும் வீடு மாறி பரிவர்தனை செய்து யாரெல்லாம் அக்காரவடிசலை விரும்பி உண்பார்கள்? 
ஆடி பூர சிறப்பு உணவான அக்காரவடிசலுக்கும் குருவும் சுக்கிரனும்தான் காரகர். ஆம்! நெய் மற்றும் இனிப்பின் காரகர் குரு பகவான். சுவையான இனிப்பு உணவிற்க்கு சுக்கிரனும் காரகர் தான். கால புருஷ ராசிபடி குரு பகவான் ஒன்பது மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளான தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதிகளாக விளங்குகிறார். மேலும் சந்திரனின் வீடான கடகத்தில் உச்சமாகிறார். சுக்கிர பகவான் போஜன ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடான ரிஷபம் மற்றும் கணவன் - மனைவி, நண்பர்கள், பொதுத்தொடர்பு, கூட்டாளிகள் ஆகியவர்களை குறிக்கும் ஜென ரஞ்சக ராசியான துலாராசிக்கும் அதிபதியாவார். 

1.தனுசு மற்றும் மீனத்தை லக்னமாகவோ சந்திர ராசியாகவோ கொண்டவர்கள். 

2. தனுசு மற்றும் மீனத்தை போஜன ஸ்தானமாக கொண்டவர்கள். 

3.ரிஷபம், துலாம் ராசிகளை லக்னமாகவோ, சந்திர ராசிகளாகவோ கொண்டவர்கள்.

5.எந்த ராசி லக்னமாக இருந்தாலும் லக்னத்தில் அல்லது போஜன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குருவோ சுக்கிரனோ இருவரும் சேர்ந்தோ நிற்கபெற்றவர்கள். 

6. குருவும் சுக்கிரனும் திரிகோணத்தில் ஆட்சி/உச்சம் பெற்றவர்கள் 

7. குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னம் மற்றும் சந்திர கேந்திரங்களில் நின்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஹம்ச யோகத்தை பெற்றவர்கள். 

8. சுக்கிர பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னம் மற்றும் சந்திர கேந்திரங்களில் நின்று பஞ்ச மகா புருஷ யோகங்களில் மாளவியா யோகம் பெற்றவர்கள் 

9. குரு ஆத்ம காரகனாகவும் சுக்கிரன் அமாத்ய காரகனாகவும் பெற்றவர்கள். 

10.குரு ஆத்மகாரகனாகி காரகாம்சத்திற்கு இரண்டில் சுக்கிரன் நிற்க பெற்றவர்கள். 

11. சுக்கிரன் ஆத்ம காரகனாகி காரகாம்சத்திற்கு இரண்டில் குரு நிற்க பெற்றவர்கள் 

12. குருவும் சுக்கிரனும் எந்த விததிலேனும் பரிவர்தனை பெற்றவர்கள். 

இந்த கூடாரவல்லி நாளில் திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் தகுந்த கணவன் மனைவியுடன் கூடவும், சண்டை போட்டு பிரிந்து வாழும் கணவன் மனைவி கூடவும், வேலை காரணமாக கணவனும் மனைவியும் படுக்கையில் இணைய முடியாமல் தவிப்பவர்கள் கூடவும், வியாபரத்தில் பிரச்சனை தரும் கூட்டாளிகள் இணக்கமாகவும், அனைத்து பகைவர்களும் நட்பு பாராட்ட விரும்புபவர்களும் அன்னை ஆண்டாளை வணங்குவது சிறப்பாகும்.
பிரிந்து வாழும் தம்பதி சேர வேண்டுமா? ஆடி பூர ஆண்டாளை தரிசியுங்கள்
 நாளைஆடி பூரம் என்று சிறப்பித்துக் கூறப்படும் நாள். இந்த நாளில் குறிப்பாக வைஷ்ணவர்கள், சிறப்பாக நெய் வடியும் பாலில் செய்த 'சர்க்கரைப் பொங்கல்' எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர். ஆண்டாள் பிறந்த ஸ்ரீ வில்லிபுத்தூர், ரங்கமன்னார் எனும் அரங்கனின் ஸ்ரீ ரங்கம், ஸ்ரீ பெரும்புதூர் போன்ற ஊரில் பிறந்தவர்கள் வைணவர்கள் அல்லாத சிலரும் கூட இதைச் மரபு வழியாக வருகிறார்கள் காரணம், கோதைநாச்சியார் பாடிய இந்த 27-வது திருப்பாவைப் பாசுரம்தான். ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் கீழ்கண்ட பாடலை பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். 

முத்தான முப்பது:
திருப்பாவையின் முதல் பத்து பாடல்களில் தன் தோழியரை எழுப்பிய ஆண்டாள், பதினோராவது பாடல் முதல் வாயில் காப்போன், நந்தகோபன், யசோதை, பலராமன் என்று அனைவரையும் எழுப்பி 18-ஆவது பாடலில் கண்ணனுடன் துயிலிருக்கும் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பி 19 -22 பாடல்களில் கண்ணனைத் துயில் எழுப்புகிறாள். முதல் பாட்டு (பாவை) நோன்பு ஆரம்பிக்கும் முன் அதன் பலனை எடுத்துக் கூறுவது இரண்டாம் பாட்டு, நோன்பு விதிகளைக் கூறுவது அடுத்த எட்டு பாடல்கள் அஷ்டமஹா சித்திகளை எழுப்புவதுதான். 23-ம் பாடல், கண்ணன் சிங்கம் போல எழுந்து வந்து சிங்காசனத்தில் அமர்ந்ததைக் கூறுகிறது. அப்படியானால் இனிமேல் கண்ணனைத் துயில் எழுப்பத் தேவையில்லை. சுப்ரபாதம் முடிந்துவிட்டது. கண்ணன் அலங்கரித்து வந்துவிட்டான். அவனை, நாம் வந்த நோக்கத்தை அவனே அறிந்து அருளும்படிப் பணிக்கிறாள், ஆண்டாள். 24-ம் பாடல், அர்ச்சனை (போற்றிகள்). 25-ம் பாடல், தூப-தீபம். நெருப்பை ஒளித்து வைத்தால் புகையும்; இந்த பாட்டில், கண்ணனை ஆயர் பாடியில் ஒளித்து வளர்த்தால் அவன், அங்கே ஒளிந்து கொள்ளாமல், கம்சன் வயிற்றில் நெருப்பாக மாறி ஒளிந்து கொண்டு விடுகிறான். அதுதான் தூப-தீபம். 26-ம் பாடல் வாத்திய முழக்கம். தூப-தீபம் முடிந்து நைவேத்யம் படைப்பதை அனைவருக்கும் அறிவிக்க மணி முதலிய வாத்தியங்கள் முழங்க வேண்டும்.

அக்கார அடிசில்

அக்கார அடிசில் என்பது வைணவ ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் ஓர் உணவுப் பொருளாகும். குறிப்பாக இது மார்கழி மாதம் 27 ஆம் நாள் செய்யப்படும். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று பாவை நோன்பைத் துவங்குவோர் மிகையளவு நெய்யும் பாலும் கலந்து இப் பண்டத்தைச் செய்வர். பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இது செய்யப்படுகிறது. சோறாக்கும் போது அரிசி நீரில் வேகவைக்கப்படும். இங்கோ அரிசி பாலில் வேகவைக்கப்படும். இது சர்க்கரைப் பொங்கல் போல திடமாகவும் இராது. பாயசம் போல திரவமாகவும் இராது.

ஆண்டாள் சொன்ன ‘அக்கார அடிசில்!’ உங்கள் வீட்டுக்கே வருவார் அரங்கன்!
பால்சாதம் மூடும்படியாக நெய் விட்டு பால் சாதம் செய்துகொடுக்கிறேன் என்று பாடுகிறாள் ஆண்டாள். அதுவும் எப்படி? பாத்திரத்தில் இருந்து எடுத்தால், உணவில் கலந்திருக்கும் நெய்யானது, அப்படியே முழங்கை வரை வழியுமாம்! அப்படி பாலும் நெய்யும் இனிப்புமாகக் கலந்து படைக்கிறேன், எழுந்திருடா கண்ணு. என்ன இப்படித் தூங்குகிறாய் என பாடி அழைக்கிறாள்.
அந்த பால் சாதம், பின்னாளில் அக்கார அடிசிலாகிவிட்டது. அக்கார அடிசில் எனும் பகவானுக்குப் பிடித்த உணவை, இன்றைய நாளில் செய்வோம். நைவேத்தியம் படைத்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி, ஆனந்தம் கொள்வோம்!
அக்கார அடிசில் எப்படிச் செய்ய வேண்டும்? மதுரை அழகர் கோவில் ஸ்தானீக அர்ச்சகர் அம்பி பட்டாச்சார்யர் எப்படிச் செய்ய வேண்டும் என விளக்குகிறார்.

இதெல்லாம் தேவை!
நல்ல பச்சை அரிசி கால்கிலோ,
வெல்லம் பாகு அரை கிலோ,
நெய் கால் கிலோ.
பாசிப்பருப்பு ஒரு கிண்ணம்.
ஒரு லிட்டருக்குக் பால்
குங்குமப் பூ,
ஏலக்காய்,
பச்சைக்கற்பூரம் ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு, திராக்ஷை
அக்கார அடிசிலுக்குப் பால் நிறைய வேண்டும். ஆண்டாள் செய்தாப்போல் நூறு தடா இல்லைனாலும் ஒரு லிட்டராவது வேண்டும். நீரே வேண்டாம். பாலிலேயே வேகவேண்டும். ஆகவே முடிந்தவரைக்கும் ஒரு லிட்டருக்குக் குறையாமல் பால்
அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும்வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆறியதும் தண்ணீர்விட்டுக் களைய வேண்டும். அதனுடன் 3 கப் பாலைச் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைக்க வேண்டும். 3 முறை விசில் சத்தம் வந்ததும் இறக்கிவைத்துவிட வேண்டும். அதன் பிறகு சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து சாதத்தை ஒரு குழிக்கரண்டியின் அடிபாகத்தால் நன்றாக மசிக்கவும்.
இப்போது, பொடித்து, நன்றாக தூள் செய்யப்பட்ட வெல்லம் ரெடியாக வைத்திருக்கிறோம்தானே! அந்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் வடிகட்டி, பிறகு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். இப்போது அது கெட்டியானல் போதும், பாகு பதம் இருக்கவேண்டும் என்பதில்லை.
வேகவைத்திருக்கும் சாதத்தை இந்த வெல்லக் கரைசலில் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். இப்போது பாதி நெய்யை ஊற்றுங்கள். எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடலாம். மீதியுள்ள நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள், உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, அக்கார அடிசிலில் கொட்டி நன்றாகக் கிளற வேண்டும்.
இந்த அக்கார அடிசிலின் விசேஷமே... இனிப்புச் சுவைதான். ஆகவே மூன்று கப் வெல்லம் என்பதே யதேஷ்டம். தேவையென்றால் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம். அப்படிச் சேர்ப்பதாக இருந்தால், நெய்யும் கொஞ்சம் சேர்க்கவேண்டும்.
சிறுவயதில், அக்கார அடிசில் பண்ணும் போது, அந்த வாசமே தெருவைத் தாண்டிப் போகும். கதவைத் திறந்து வைங்கப்பா. அக்கார அடிசில் வாசத்துக்கே பெருமாள் வந்துருவான் பாரு’ என்பாள் என் பாட்டி!
உங்கள் வீட்டிலும் இந்த நல்ல நாளில் அக்கார அடிசில் பண்ணி, பெருமாளுக்கு நைவேத்தியம் பண்ணுங்கள். அக்கார அடிசில் சாப்பிட அந்த அரங்கனே ஓடிவருவான் உங்கள் வீட்டுக்கு!
ஆடி பூர தினத்தன்று, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் கூடிய பெருமாளை சேவிப்போம். அக்காரவடிசல் அன்னதானத்தில் பங்குகொள்வோம். பக்தி செய்வோம். பயனுறுவோம்.
ஆண்டாள் வாழித்திருநாமம்:
திருவாடிப்பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே 
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே 
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே 
ஒருநூற்றுநாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே 
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே 
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே 
வண்புதுவைநகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே. 
ஆண்டாள் மங்கள ச்லோகம் :
ஸ்ரீமத்யை விஷ்ணுசித்தார்யை மனோநந்தன ஹேதவே |
நந்தநந்தன ஸுந்தர்யை கோதாயை நித்யமங்களம் ||
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்