கால்பந்தை வளர்த்தெடுக்க இந்திய கால்பந்து அணிக்காக பிரத்யேகமாக ரூ.16 லட்சம் சம்பளத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமித்துள்ளது.

நடந்து முடிந்த ஏ.எஃப்.சி. ஆசியக் கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா சிறப்பாக ஆடி பிரதான ஆசியக்கோப்பைக்குத் தகுதி பெற்றது. இதற்குக் காரணம் இந்த ஜோதிடர்களின் ‘உத்வேகமூட்டல்’ என்று இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு சார்பாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அணி நிர்வாகி ஒருவர் பிடிஐ-செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “ஆசியக் கோப்பை கால்பந்து தொடர்பாக ‘உத்வேகமூட்டுபவர்’ நியமிக்கப்பட்டுள்ளார். பிறகுதான் அது ஜோதிட நிறுவனம் என்று தெரிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பெரிய கேலியையும் கிண்டலையும் கிளப்பியுள்ளது, முன்னாள் இந்திய கோல் கீப்பர் தனுமாய் போஸ், இதன் மூலம் இந்திய கால்பந்து கூட்டமைப்பு உலக அரங்கில் பெரிய அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் உரித்தான பொருள் ஆனது என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்திய கால்பந்து கூட்டமைப்பு முறையான இளையோர் கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல், பல நல்ல கால்பந்து தொடர்கள் முடங்கியதுதான் நடந்தது. இதோடு இப்போது ஜோதிடர்களிடம் இந்திய கால்பந்தை ஒப்படைத்தது இந்தியக் கால்பந்தையே கேலிக்குரியதாக்கும் முயற்சியாகும்” என்று தனுமாய் போஸ் தெரிவித்துள்ளார்.

“இந்திய கால்பந்துக் கூட்டமைப்பில் ஏகப்பட்ட ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன, அதில் இது ஒன்றாக இருக்கலாம் விரைவில் இவற்றை அம்பலப்படுத்த வேண்டும்” என்று தனுமாய் போஸ் கூறியுள்ளார்.

இந்தியக் கால்பந்தில் ஜோசியம் புதிதல்ல, ஒருமுறை டெல்லியில் உள்ள கால்பந்து கிளப் ‘பாபா’ என்ற ஒருவரை நியமித்தது, போட்டியை வென்ற பிறகு அவரால்தான் வென்றதாக பெருமைப் பட்டுக் கொண்டதும் நடந்திருக்கிறது.