ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் இலங்கை தமிழர் குடியிருப்பு முகாமை சேர்ந்தவர் கிளிண்டன் என்கிற வினோத் (வயது 21). இவர் அதே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சுஜிதா என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு புதுமண தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கிளிண்டன் தனது மனைவியுடன் சில நாட்களுக்கு முன்பு பாணாவரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவரது கன்னம், கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி கிளிண்டனை பாணாவரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கிளின்டனை வெட்டியவர்கள் யார்?, எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.