வேலுார் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் புருஷோத் பாபு(35). இவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். வேலுார் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் இவரிடம் மாதச்சீட்டு, பண்டிகை சீட்டு உள்ளிட்ட பலவகைகளில் சீட்டு கட்டி வந்தனர்.

மேலும் இவர் பலரின் கிரெடிட் கார்டுகளை பெற்று பணம் கொடுக்கல், வாங்கல் போன்ற தொழிலும் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சீட்டு எடுத்தவர்கள் பணத்தைக் திரும்பகேட்டனர்.

ஆனால், அவர் பணத்தை தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் திடீரென காணாமல் போனார்.

அவரிடம் ஒரு கோடியே 50 லட்சம் வரை சீட்டு மற்றும் பல வகைகளில் பணத்தை கட்டி ஏமாந்த பொதுமக்கள் வேலுார் எஸ்பி அலுவலகத்தில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் செய்தனர். அவரை குற்றப்புலனாய்வு போலீசாரும், சீட்டு கட்டியவர்களும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை புருஷோத்பாபு சத்துவாச்சாரியில் இருக்கும் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இதையறிந்த, சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் அவரை பிடித்து இரவு முழுவதும் வைத்து தாக்கியதாக கூறப்கூறப்படுகிறது. பின்னர், அவரை எஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவருக்கு ஏதாவது நடந்தால் நீங்கள்தான் பொறுப்பு என எழுதி வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, போலீசாரிடம் கேட்டபோது, புகாரின் பேரில் புருஷோத் பாபுவை தேடி வந்தோம். ஆனால், அவரை சீட்டு கட்டியவர்களே பிடித்து அடித்து உதைத்துள்ளனர். இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வந்த பின்னர்தான் விசாரிக்கப்படும். அதுவும் உயர் அதிகாரிகள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது பொறுத்துள்ளது என்றனர்.