சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும், பொது மக்களின் பாதுகாப்பு கருதி பொது இடங்களில் இப்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
கொலை, கொள்ளை, விபத்து போன்ற பல சம்பவங்களில் குற்றவாளிகளை சிசிடிவி பதிவு மூலமாக எளிதாக போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால், நெடுஞ்சாலைகள், குடியிருப்பு பகுதிகளிலும் அதிகளவு கேமராக்கள் பொருத்தும் பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தனியார் நிறுவனங்களும் பங்களிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது.
அதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சப்டிவிஷனுக்குட்பட்ட இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க எம் ஆர்எப் நிறுவனம் சார்பில் 15 லட்ச ரூபாய் செலவில் 96 சிசிடிவி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் பயன்பாடு தொடக்க விழா அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. டிஐஜி ஆனி விஜயா, எஸ்பி தீபா சத்யன் ஆகியோர் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின்போது இன்ஸ்பெக்டர் சேதுபதி, எம்ஆர்எப் நிறுவன அரக்கோணம் பொதுமேலாளர் ஜான்டேனியல், தலைமை இன்ஜினியர் எல்வின், தலைமை பாதுகாப்பு அலுவலர் பிரசாத்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.