Son killed and buried his father in a property dispute in Chennai Valasaravakkam

சென்னை வளசரவாக்கத்தில் சொத்துத்தகராறில் மகனே தந்தையை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் புதைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

வளசரவாக்கத்தில் வசித்து வந்த 80வயது முதியவர் குமரேசனை காணவில்லை என அவரது மகள் காஞ்சனா வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குமரேசனின் மகன் குணசேகரன் காணாமல் போனதும், அவரது வீட்டில் ரத்தக்கறை இருந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சொத்துத்தகராறில் குமரேசன் கொலை செய்யப்பட்டிருப்பதும் அவரது உடலை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்திற்கு கொண்டு சென்று குணசேகரன் புதைத்திருப்பதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த குணசேகரனின் நண்பர் வெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு எதிராக வைக்கப்பட்ட செய்வினையை புதைக்க வேண்டுமென சொல்லி, தண்ணீர் பேரலை பூமிக்கடியில் குணசேகரன் புதைத்ததாக கூறியுள்ளார்.

தொடர்ந்து சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் காவேரிப்பாக்கத்தில் அந்த இடத்தை குணசேகரன் வாங்கி உள்ளார்.