ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை எந்த தலங்கள் என்று பார்க்கலாம்.பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து இரணியனை வதம் செய்த பிறகு, பிரகலாதனின் பிரார்த்தனையின்பேரில் இந்தியாவில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.

சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

சிங்கிரிக்குடி : 


புதுச்சேரியில் இருந்து இந்த தலம் மிக அருகில் உள்ளது. எனவே ஒரே நாளில் 3 நரசிம்மரை வழிப்பட விரும்புபவர்கள் புதுச்சேரி வந்து பிறகு இந்த தலத்தில் இருந்து வழிபாட்டை தொடங்கலாம். இங்கிருந்து பூவரசங்குப்பம் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.

சிங்கிரிக்குடி பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

திருமணம் தடைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட எதிரிகளின் தொல்லைகள் இருக்காது. 

பூவரசங்குப்பம் : 


நேர் கோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் தலங்களில் நாம் 2-வதாக வழிப்பட வேண்டியது பூவரசங்குப்பத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயமாகும். 
பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீஅமிர்தவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பூவரசங்குப்பம் நரசிம்மரை வழிபட, உடற்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கும். இங்கிருந்து பரிக்கல் 39 கி.மீ. தொலைவில் உள்ளது.

பரிக்கல் : 


3 நரசிம்மர் தலங்களில் நாம் இறுதியாக வழிப்பட வேண்டியது பரிக்கல்லில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம் ஆகும். இந்த கோவில் விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. 

பெருமாளின் திருநாமம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர் களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காலையில் பரிக்கல், நண்பகலில் பூவரசங்குப்பம், மாலையில் சிங்கிரிக்குடி என்ற வரிசைப்படி தரிசிக்க வேண்டும். காலையில் சீக்கிரமாக வழிப்பாட்டை தொடங்கினால்தான் மதியம் நடை மூடுவதற்குள் சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம் இரு தலங்களிலும் எளிதாக தரிசனம் செய்ய முடியும். அதன் பிறகு மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பூவரசங்குப்பம் பகுதியிலேயே சற்று ஓய்வு எடுக்கலாம். அதன் பிறகு பரிக்கல் ஆலயத்திற்கு புறப்பட்டு சென்று வழிப்படலாம். 

மாலை 5 மணிக்குள் பரிக்கல் ஆலயத்தில் வழிப்பாட்டை முடித்தால்தான் தொலைவில் இருந்து வருபவர்களுக்கு வீடு திரும்புவதற்கு வசதியாக இருக்கும். 
சென்னையில் இருந்து செல்பவர்கள் காரில் சென்றால் புதுச்சேரியில் இருந்து தரிசனத்தை தொடங்கி பரிக்கல்லில் முடித்து விட்டு விழுப்புரம் வழியாக எளிதாக சென்னை வரலாம். இந்த வரிசையில் குழப்பம் ஏற்பட்டுவிட்டால் ஐதீகப்படி வழிபாட்டை தொடர்வது சிக்கலாகிவிடும். எனவே ஒரே நாளில் இந்த 3 நரசிம்மர் தலங்களையும் வழிபட புறப்படும் முன்பு நன்கு திட்டமிட்டு பயணத்தை அமைத்து கொள்ளுங்கள்.