குழந்தைகள் பிறந்த பின், தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கம் காது குத்துதல். குழந்தைகளுக்கு காது குத்துவது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்து மதத்தை பொறுத்தவரை குழந்தை பிறந்த பதினோராவது மாதத்திலோ அல்லது அதற்கு பிறகோ காது குத்துவது வழக்கம். ஆண் குழந்தை, பெண் குழந்தை என இருவருக்கு காது குத்தப்படுகிறது. 

'தான்" என்ற அகங்காரம் அந்தக் குழந்தைக்கு எந்த வயதிலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு வயது முடியும் தருவாயில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துகிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
அறிவியல் காரணம் : 

இந்த சடங்கிற்கு பின் ஒரு அற்புதமான அறிவியல் ஒளிந்துள்ளது. நமது உடலை ஒரு சக்தி மண்டலம் இயக்குகிறது. அந்த சக்தி மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள, நாம் சிலவற்றை செய்ய வேண்டும். அதில் ஒன்று தான் காது குத்துதல் என்னும் சடங்கு.

'அக்குபஞ்சர்" என்ற வைத்திய சிகிச்சை முறை உள்ளது. அதில் உடலில் ஓட்டை போட்டுதான் சிகிச்சையளிப்பார்கள். இதை நன்கு அறிந்திருந்த நம் முன்னோர், காது குத்துவதை ஒரு சடங்காக செய்ய சொல்லியுள்ளனர்.

காது குத்தும் சமயத்தில் கவனிக்க வேண்டியவை :

பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ஆகையால் காது குத்துவதற்கு முன்பு காது சுத்தமாக இருக்கிறதா, காது குத்தும் ஊசி சுத்தமாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது அவசியம். இல்லையேல் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

காதில் அணிவிப்பதற்காக வாங்கும் தோடு தொங்குவது போல் இல்லாமல் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. குழந்தைகள் புதிதாக தோடு அணிவதால் அவர்களுக்கு அதை இழுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வாய்ப்புள்ளது. ஆகையால் அவர்கள் கையில் சிக்காத வகையில் தோடு இருப்பது நல்லது.

காது குத்திய பிறகு குறைந்தது ஒரு வார காலத்திற்கு அந்த இடத்தில் தூய தேங்காய் எண்ணெயை விட்டு வரலாம். தினமும் இருமுறை கம்மலை திருக வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறுமாதம் வரை திருகினால்தான் கம்மல் காதோடு ஒட்டாமல் காதில் உள்ள ஓட்டை தெளிவாக இருக்கும்.

காது குத்திய பின் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு காது குத்திய பின், அவர்கள் அதை பிடித்து இழுத்து விடாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். 

குழந்தைகளுக்கு கண்டிப்பாக அந்த இடத்தில் வலி இருக்கும், அரிப்பு ஏற்படுவது போன்ற உணர்வு மற்றும் ஒருவித அசௌகரியம் ஏற்படும்.

ஆனால், எந்த காரணத்திற்காகவும் குழந்தைகள் காதையோ, அதில் போட்டு விடப்பட்டு இருக்கும் கம்மலையோ இழுத்து பாதிப்பை ஏற்படுத்திக் கொள்ளாத வண்ணம் கவனித்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.
பலன்கள் : 

காது குத்தி தோடு அணிவதன் மூலம், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும். செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது.

குழந்தைகளுக்கு சிறு வயதிலே காது குத்துவதன் மூலம் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.