ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ஒரு தனியார் மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்தத் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் வாகனங்கள் மூலமாக எடுத்துச் சென்று ஆந்திர மாநிலம் புத்தூர் அருகில் உள்ள சித்தூர்-கல்லாறு பகுதிகளில் உள்ள காலி நிலங்களில் கொட்டப்படுவதாக, ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத்துக்கு புகார் வந்தது.
அதன்பேரில் உதவி கலெக்டர் இளம்பகவத் மற்றும் சுற்றுச் சூழல் துறையினர் அந்தத் தொழிற்சாலைக்கான மின் இணைப்பை துண்டிக்கும்படி உத்தரவிட்டனர். அதன்படி அந்தத் தொழிற்சாலைக்கான மின் இணைப்பை மின்வாரியத்துறையினர் நேற்று துண்டித்தனர்.

மருந்து கழிவுகளை ஏற்றி சென்ற ஒரு லாரியை வருவாய்த்துறையினர் பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கழிவுகள் வெளியேறுவது குறித்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.