ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்தக் கொதிப்பு நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மாத்திரைகள் வழங்க வேண்டும், என்று அரசு மருத்துவம்னைகளுக்கு கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 5 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 300 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை களும், 234 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும் உள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் 190 ஆக்சிஜன் படுக்கைகளும், 115 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் உள்ளன. தமிழக முதல்வர் உத்தரவின்படி மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் 82 படுக்கைகளும், தனியார் மருத் துவமனைகளில் 67 படுக்கைகளும் காலியாக உள்ளன. வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கொரோனா சிகிச்சைக்கான ஐசிசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைதொடர்ந்து அளிக்கப்பட்டுவருகிறது.
வாலாஜா அரசு மருத்துவமனையில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகள் மற்றும் பிரசவம் பார்க்கப்படுகிறது. எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சர்க்கரை, ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மாத்திரைகள் வழங்க வேண்டும், என்று அரசு மருத்துவ மனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை அனைத்து பொதுமக்களும் போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக 04172 273166, 273188 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.